அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் மின்னணு பொறியியல் வளர்ச்சி பெற வேண்டும் என விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பேசினார்.
வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தின் மின்னணு பொறியியல் பள்ளியின் மைக்ரோ, நானோ எலக்ட்ரானிக்ஸ் துறை சார்பில் மைக்ரோ எலக்ட்ரானிக்ஸ் டிவைசஸ், சர்க்கியூட்ஸ், சிஸ்டம்ஸ் குறித்த இரண்டு நாள் சர்வதேச கருத்தரங்க தொடக்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு தலைமை வகித்து, கருத்தரங்க குறுந்தகட்டை வெளியிட்டு விஐடி வேந்தர் ஜி.விசுவநாதன் பேசியதாவது:
மின்னணு பொறியியல் தொழில்நுட்ப வளர்ச்சியால் பல்வேறு நன்மைகள் கிடைத்து வருகின்றன. உலகில் உள்ள 50 சதவீத நடுத்தர மக்களின் தேவைகளை மின்னணு தொழில்நுட்பம் பூர்த்தி செய்திருப்பதுடன், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தியுள்ளது.
முதலீட்டாளர்களை ஈர்க்கும் வகையில் மின்னணு பொறியியல் விளங்கி வருகிறது. அனைத்து தரப்பு மக்களும் பயனடையும் வகையில் மின்னணு பொறியியல் வளர்ச்சி பெற வேண்டும் என்றார்.
பெங்களூரில் உள்ள குளோபல் பவுன்ட்ரீஸ் தொழில்நுட்ப வளர்ச்சி இயக்குநர் சைலஸ்ரீ நடராஜன் கருத்தரங்கைத் தொடங்கி வைத்தார்.
தைவான் நாட்டின் டிசிங் ஹீவா பல்கலைக்கழகப் பேராசிரியர் சாங் லியோ கெளரவ விருந்தினராகப் பங்கேற்றார்.
இதில், மின்னணு பொறியியல் வல்லுநர்கள், பேராசிரியர்கள், இளம் ஆராய்ச்சியாளர்கள், மாணவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
மின்னணு சாதனங்கள் தொடர்பாக 242 ஆராய்ச்சித் திட்டங்கள் ஆய்வுக்கு பதிவு செய்யப்பட்டு 146 இதழ்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன.
நிகழ்ச்சியில், விஐடி மின்னணு பொறியியல் பள்ளி முதல்வர் எலிசபெத் ரூபஸ் வரவேற்றார். மைக்ரோ, நானோ எலக்ட்ரானிக்ஸ் துறைத் தலைவர் சிவசங்கரன் நன்றி கூறினார்.