திருப்பத்தூரில் அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு வியாழக்கிழமை யோகா பயிற்சி அளிக்கப்பட்டது.
வேலூர் மாவட்ட அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டத்தின் கீழ் அரசு மற்றும் அரசு உதவிபெறும் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கான யோகா பயிற்சி 2 நாள்களுக்கு மனவளக்கலை சார்பில் அளிக்கப்படுகிறது.
அதன்படி, திருப்பத்தூர் மீனாட்சி அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் யோகா பயிற்சி வகுப்பு வியாழக்கிழமை தொடங்கியது. நிகழ்ச்சிக்கு, பள்ளி தலைமை ஆசிரியை க.செல்வி தலைமை வகித்தார். திட்ட ஒருங்கிணைப்பாளர் செந்தில் வரவேற்றார். மனவளக்கலை அமைப்பைச் சேர்ந்த சந்திரசேகர், தமிழரசி, தேன்மொழி, ரகுபதி உள்ளிட்டோர் யோகா பயிற்சி அளித்தனர். இதில், 85 ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.