வேலூர் அருகே மாணவர்களை தரக்குறைவாகப் பேசிய சம்பவம் தொடர்பாக அரசுப் பள்ளித் தலைமை ஆசிரியை வெள்ளிக்கிழமை தாற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டார்.
வேலூர் அருகே பூட்டுத்தாக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றி வந்தவர் பூம்பாவை. இவர், கழிப்பறை உள்ளிட்டவற்றை மாணவ, மாணவியரை சுத்தம் செய்யுமாறு மிரட்டி, தரக்குறைவாகப் பேசினாராம். இதுகுறித்து மாணவர்கள் தங்களது பெற்றோரிடம் கூறினர். மேலும், மாவட்ட நிர்வாகத்தின் கவனத்துக்கு பலமுறை எடுத்துச் சென்றும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர், தங்களது குழந்தைகளுடன் ஆகஸ்ட் 10-ஆம் தேதி பள்ளியை மூடி மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுதொடர்பாக நேரில் விசாரணை நடத்திய மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் குணசேகரன், தலைமை ஆசிரியை பூம்பாவையை தாற்காலிகப் பணி நீக்கம் செய்து உத்தரவிட்டார்.
மேலும், இப்பள்ளியில் பணியாற்றி வந்த ஆசிரியை ஆரோக்கிய மேரி அருகே உள்ள மற்றொரு பள்ளிக்கு தாற்காலிக அடிப்படையில் இடமாற்றம் செய்யப்பட்டார்.