வேலூர் மாவட்டத்தில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களில் உர விற்பனைக்கு பாய்ண்ட் ஆஃப் சேல் கருவிகள் வெள்ளிக்கிழமை விநியோகிக்கப்பட்டன.
நாடு முழுவதிலும் மானிய விலையில் விவசாயிகளுக்கு உர விற்பனையை முறைப்படுத்த மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கையின் பயனாக, ஆதார் எண்ணை பயன்படுத்தி பாயிண்ட் ஆஃப் சேல் கருவி மூலம் உர விற்பனை மேற்கொள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கச் செயலாளர்கள், மொத்த விற்பனையாளர்கள், தனியார் விற்பனையாளர்களுக்கு அண்மையில் பயிற்சி அளிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்களுக்கு பாயிண்ட் ஆஃப் சேல் கருவியை ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் வழங்கி தொடங்கி வைத்தார்.
வேளாண்மை இணை இயக்குநர் ப.வாசுதேவ ரெட்டி, உதவி இயக்குநர் (தரக்கட்டுப்பாடு) கு.நெப்போலியன், வேளாண் அலுவலர் வி.முருகன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.