ஆம்பூர் அருகே அகரம்சேரி கிராமத்தில் உள்ள மாதனூர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இதில், கல்லூரி முதல்வர் (பொறுப்பு) ஜெ. பாபி ராஜகாந்தி தலைமையில் பேராசிரியர்கள் மு.முகமது அலி ஜின்னா, எஸ். திருநாவுக்கரசு, முரளி கிருஷ்ணன், சரவணன், உதயகுமார் ஆகியோர் கலந்தாய்வு நடத்தி மாணவர்களுக்கு கல்லூரியில் சேர்வதற்கான ஆணைகளை வழங்கினர்.
கல்லூரியில் பி.ஏ. தமிழ், ஆங்கிலம், பி.காம்., பி.எஸ்சி. கணினி அறிவியல், கணிதம் ஆகிய 5 பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற்றது. மொத்தம் 245 விண்ணப்பங்கள் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு அதில் சேர்க்கைக்காக 206 பேர் மனு அளித்தனர். அவர்களுக்கு கலந்தாய்வு நடத்தப்பட்டு கல்லூரியில் சேர்க்கப்பட்டனர்.
நிகழ்ச்சியில் அகரம்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியின் தலைவர் ஆர். வெங்கடேசன், அகரம்சேரி உயர்நிலைப் பள்ளித் தலைமை ஆசிரியர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்.