வேலூர் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் சனிக்கிழமை இரவு பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர் மழையால் பொது மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக விட்டு விட்டு மழை பெய்து வந்தது. வாணியம்பாடி, நாட்டறம்பள்ளி போன்ற பல பகுதிகளில் கனமழை பெய்ததால் பாலாற்றில் நீர்வரத்து அதிகரித்தது.
இந் நிலையில், மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் சனிக்கிழமை இரவு கனமழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது.
வேலூரில் சனிக்கிழமை இரவு தொடங்கிய மழை ஞாயிற்றுக்
கிழமை அதிகாலை வரை நீடித்ததால் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோயில் எதிரில் உள்ள காவலர் பயிற்சிமைய மைதானத்தில் மழைநீர் குளம் போல தேங்கியது. இதுதவிர, பெரும்பாலான சாலைகளில் மழைநீர் தேங்கி பெருக்கெடுத்து ஓடியதால் மக்கள் மகிழ்ச்சியடைந்தனர்.
மாவட்டத்தில் அதிகபட்சமாக மேல் ஆலத்தூரில் 81.2 மி.மீட்டர் மழை பதிவானது. மாவட்டத்தில் பதிவான மழை அளவு விவரம் மி.மீட்டரில்:
வேலூர்- 72.2, ஆம்பூர்- 13.2, வாணியம்பாடி-8, ஆலங்காயம்- 14.8, காவேரிபாக்கம் - 8.8, வாலாஜாபேட்டை- 14, திருப்பத்தூர்- 14.2, ஆற்காடு- 62, குடியாத்தம் - 39.2, மேல் ஆலத்தூர் - 81.2.