திருப்பத்தூர் அருகே உள்ள செலந்தம்பள்ளி கிராமத்தில் மின்மோட்டார் பழுதால் தண்ணீர் விநியோகம் தடைபட்டு, ஒருங்கிணைந்த மகளிர் சுகாதார வளாகம் பயன்பாடின்றி கிடக்கிறது.
திருப்பத்தூர் ஒன்றியத்துக்கு உள்பட்டது செலந்தம்பள்ளி கிராமம்.இங்கு சுமார் 1,500-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். திருப்பத்தூர் ஒன்றிய அளவில் இது சிறிய ஊராட்சியாகும். இங்கு கடந்த 2011-2012-ஆம் ஆண்டு ஊராட்சி ஒன்றியம் சார்பில், ஊரக கட்டடங்கள் பராமரிப்பு மற்றும் புனரமைத்தல் திட்டத்தின் கீழ், ஒருங்கிணைந்த மகளிர் குழந்தைகள் சுகாதார வளாகம் கட்டப்பட்டது.
இந்நிலையில், கடந்த 6 மாதங்களுக்கு முன், இந்த சுகாதார வளாகத்தில் இருந்த மின்மோட்டார் பழுதடைந்தது. இதையடுத்து, தண்ணீர் விநியோகம் தடைபட்டதால், இதனை பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது.
பல லட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த கட்டடம் தற்போது, பராமரிப்பின்றி உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் பலமுறை புகார் தெவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என இப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
எனவே, பழுதான மின் மோட்டாரை உடனடியாக சரிசெய்து, மீண்டும் பயன்பாட்டுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டும் என பொதுமக்கள், சமூகஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதேபோல் கதிரம்பட்டியில் உள்ள ஆண்கள் சுகாதார வளாகத்தையும் பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.