வேலூர் மாவட்ட வேளாண்மை அலுவலர்களுக்கான தொழில்நுட்பம் குறித்த மாதாந்திர மண்டல பணிமனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்றது.
மாவட்ட வேளாண்மைத் துறை சார்பில் விரிஞ்சிபுரம் வேளாண்மை அறிவியல் நிலையத்தில் நடைபெற்ற இக்கூட்டத்துக்கு, வேளாண் இணை இயக்குநர் வாசுதேவரெட்டி தலைமை வகித்தார். விரிஞ்சிபுரம் வேளாண்மை அறிவியல் நிலையத் தலைவர் பேராசிரியர் பாண்டியன், திட்ட ஒருங்கிணைப்பாளர் ஜோஸ்வா டேவிட்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேளாண்துறை துணை இயக்குநர் (மத்தியத் திட்டம்) சத்தியமூர்த்தி வரவேற்றார்.
இதில், புதுவரவு நெல், துவரை பயிர்களை விவசாயிகள் நடச் செய்வது, நிலக்கடலைப் பயிரை நோய் தாக்குதலில் இருந்து பாதுகாக்க மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் உள்ளிட்ட தொழில்நுட்பங்கள் குறித்து வேளாண் உதவி இயக்குநர்கள், அலுவலர்களுக்கு எடுத்துரைத்தனர்.