வாலாஜாபேட்டை, காவேரிபாக்கத்தில் அங்கன்வாடி ஊழியர்கள் மற்றும் உதவியாளர் சங்கத்தினர் வியாழக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
காவேரிபாக்கம் அங்கன்வாடி ஊழியர்கள் அலுவலகம் எதிரே நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்டத் தலைவர் பிரேமாவதி தலைமை வகித்தார்.
நிர்வாகிகள் வசந்தி தாயாரம்மாள், வெண்ணிலா, தனபாக்கியம், நாகம்மாள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், அங்கன்வாடி ஊழியர்கள், உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம், ஊதியக் குழு நிலுவை தொகை, ஓய்வு பெறும் ஊழியர்களுக்கு முறையான ஓய்வூதியம் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
இதேபோல வாலாஜாபேட்டை வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே உள்ள அங்கன்வாடி அலுவலகம் எதிரே நிர்வாகி சுசிலா தலைமையில் 40-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.