மாதனூர் அருகே பள்ளி வளாகத்திலேயே பூசணியை விளைவித்து அதை சத்துணவுடன் சேர்த்து மாணவர்கள் சாப்பிட்டனர்.
மாதனூர் அருகே பள்ளிகுப்பம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியின் தலைமை ஆசிரியராக சேகர் பணிபுரிந்து வருகிறார். மாணவர்கள் பள்ளியில் மரக்கன்றுகளை நட்டு பராமரித்து வருகின்றனர்.
மேலும், பள்ளிக் கட்டடத்தின் பின்புறம் மாணவர்கள் பூசணி விதையிட்டனர். பின்னர் அதை மாணவர்கள் பராமரித்து வந்தனர். எந்தவித செயற்கை உரமும் இல்லாமல் இயற்கையாகவே பூசணி கொடி வளர்ந்து காய்கள் காய்த்துள்ளன. மேலும் பல்வேறு செடிகளையும் மாணவர்கள் பள்ளி வளாகத்தில் வளர்த்து வருகின்றனர்.
இந்நிலையில், காய்ந்த பூசணிக் காயை புதன்கிழமை அறுவடை செய்து பள்ளியில் சத்துணவில் சேர்த்து சமைக்கப்பட்டு அனைத்து மாணவர்கம் சாப்பிட்டனர். மாணவர்கள் இயற்கை முறையில் பூசணி பயிர், மரம், பல்வேறு செடிகளை வளர்த்து வருவதை அப்பகுதி மக்கள் ஆர்வமுடன் பார்த்து செல்கின்றனர்.