திருத்தணியில் இருந்து காஞ்சிபுரம் நோக்கி காரில் சென்ற ரெளடிகள் 4 பேரை அரக்கோணம் போலீஸார் சுற்றிவளைத்து கைது செய்தனர்.
காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டைச் சேர்ந்த தேவராஜ் (40), அப்பு (எ) கார்த்தி (29), சுரேஷ்குமார் (30), அம்பத்தூரை அடுத்த பட்டறைவாக்கத்தைச் சேர்ந்த சிவா (39) ஆகிய 4 பேரையும் கொலை, கொள்ளை வழக்குகள் தொடர்பாக செங்கல்பட்டு போலீஸார் தேடி வருந்தனர்.
இவர்கள் 4 பேரும் திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலையடுத்து செங்கல்பட்டு டி.எஸ்.பி. மதிவாணன் தலைமையிலான போலீஸார் அவர்ளைப் பிடிக்க நடவடிக்கை எடுத்தனர்.
இந்நிலையில், அவர்கள் 4 பேரும் காரில் திருத்தணியில் இருந்து அரக்கோணம் வழியே காஞ்சிபுரம் செல்வதாக வியாழக்கிழமை தகவல் கிடைத்தது. இந்த தகவல் அரக்கோணம் போலீஸாருக்கு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அரக்கோணம் டி.எஸ்.பி. குத்தாலிங்கம், ஆய்வாளர்கள் நாகராஜன், அண்ணாதுரை தலைமையிலான போலீஸார் பஜார் பகுதியில் காவல் நிலையம் அருகே வேறு வாகனத்தை குறுக்கே நிறுத்தி ரெளடிகள் வந்த காரை மடக்கினர். பின்னர், துப்பாக்கி முனையில் 4 பேரையும் போலீஸார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்த 1 பட்டா கத்தி, 1 பெப்பர் ஸ்பிரே பாட்டில், 2 உயர்வகை செல்லிடப்பேசிகள் மற்றும் கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதைத் தொடர்ந்து அரக்கோணம் வந்த செங்கல்பட்டு டி.எஸ்.பி. மதிவாணனிடம், 4 பேரும் ஒப்படைக்கப்பட்டனர்.