வேலூர் மாவட்டத்தில் கொடி நாள் வசூல் ஊர்வலம் பல்வேறு இடங்களில் வியாழக்கிழமை நடைபெற்றது.
வேலூரில் சிப்பாய் புரட்சி நினைவு தூண் அருகே கொடி நாள் வசூல் ஊர்வலத்தை ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் நிதி வழங்கி தொடங்கி வைத்தார். மாவட்ட வருவாய் அலுவலர் செங்கோட்டையன், வருவாய் கோட்டாட்சியர் செல்வராஜ், முன்னாள் படை வீரர் நலத் துணை இயக்குநர் சங்கீதா ஆகியோர் கலந்து கொண்டனர்.
ஆம்பூரில்...
ஆம்பூரில் வருவாய்த் துறை கிராமச் சாவடி அருகே வட்டாட்சியர் மீராபென் காந்தி ஊர்வலத்தைத் தொடங்கி வைத்தார்.
நகராட்சி ஆணையர் (பொறுப்பு) எல். குமார், துணை வட்டாட்சியர் குமாரி, வருவாய் அலுவலர் வெங்கடேசன், கிராம நிர்வாக அலுவலர் ராஜேந்திர
பிரசாத், கேஏஆர் பாலிடெக்னிக் கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர்.
அரக்கோணத்தில்...
அரக்கோணம் வட்ட வருவாய்த் துறையினர் சார்பில் நடைபெற்ற கொடி நாள் ஊர்வலத்தை வட்டாட்சியர் வேணுகோபால் நிதியளித்து தொடங்கி வைத்தார். இதில், சமூகப் பாதுகாப்புத் திட்ட தனி வட்டாட்சியர் ஜெயந்தி, நகர நிலவரி திட்ட தனி வட்டாட்சியர் ராஜேஷ், வட்ட வழங்கல் அலுவலர் குமார், வருவாய் அலுவலர் தனசேகர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பள்ளி மாணவ, மாணவியர் பங்கேற்ற இந்த ஊர்வலம் நகர முக்கிய வீதிகள் வழியே சென்றது.
குடியாத்தத்தில்...
குடியாத்தத்தில் வருவாய்த் துறை சார்பில் வட்டாட்சியர் அலுவலகத்தில் தொடங்கிய ஊர்வலத்துக்கு வட்டாட்சியர் இ.நாகம்மாள் தலைமை வகித்தார். நகராட்சி ஆணையர் (பொறுப்பு) பி. சங்கர், சுகாதார அலுவலர் தமிழ்ச்செல்வன், சுகாதார ஆய்வாளர் பிரகாஷ், கட்டட ஆய்வாளர் கௌசல்யா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நகரில் உள்ள பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்ற ஊர்வலம் நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்று வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவுற்றது.
ராணிப்பேட்டையில்...
ராணுவ வீரர்களின் நலனுக்காக திருவள்ளுவர் பல்கலைக்கழக துணைவேந்தர் க.முருகன், பதிவாளர் வி.பெருவழுதி உள்ளிட்டோர் வியாழக்கிழமை கொடி நாள் நிதியை வழங்கினர்.
ஆண்டுதோறும் டிசம்பர் 7-ஆம் தேதி கொடி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நாளில் நாட்டின் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத்தையும் போற்றும் நாளாக 1949-ஆம் ஆண்டு முதல் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அந்நாளில் முப்படை வீரர்களின் குடும்ப நல்வாழ்வுக்காவும், உடல் உறுப்புகளை இழந்த முன்னாள் வீரர்களின் மறுவாழ்வுக்காவும் கொடி நாள் நிதி திரட்டப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு கொடி நாள் நிதி வசூல் நிகழ்ச்சி வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, பல்கலைக்கழகத் துணைவேந்தர் க.முருகன் தலைமை வகித்து, கொடி நாள் நிதி வழங்கி தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, பதிவாளர் வி.பெருவழுதி கொடி நாள் நிதியை வழங்கினார். பின்னர், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகள், அலுவலகப் பணியாளர்கள் உள்ளிட்டோர் கொடி நாள் நிதியை வழங்கினர்.
திருப்பத்தூரில்...
திருப்பத்தூரில் நடைபெற்ற கொடி நாள் வசூல் ஊர்வலத்தை சார்-ஆட்சியர் தொடங்கி வைத்தார்.
வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் முக்கிய சாலைகள் வழியாகச் சென்று மீண்டும் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிறைவடைந்தது.
இதில், வட்டாட்சியர் ஸ்ரீராம், டி.எஸ்.பி. பாலகிருஷ்ணன் மற்றும் நூற்றுக்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். ஊர்வலத்தில் ரூ. 2 லட்சம் வசூலிக்கப்பட்டது.
ஆற்காட்டில்...
ஆற்காட்டில் வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் தொடங்கிய ஊர்வலத்தை வட்டாட்சியர் எஸ்.சரவணன் தலைமை வகித்து தொடங்கி வைத்தார். முக்கிய வீதிகள் வழியாக சென்று பேருந்து நிலையத்தில் ஊர்வலம் நிறைவு பெற்றது.
இதில், ஆற்காடு அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள், வருவாய்த் துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.