ராணிப்பேட்டை ராமானுஜர் ஆன்மிக அறக்கட்டளை சார்பில் சர்வதேச மாற்றுத் திறனாளிகள் தினம் கொண்டாடப்பட்டது. மாற்றுத் திறனாளிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை நல உதவிகள் வழங்கப்பட்டன.
நிகழ்ச்சிக்கு ஆன்மிக அறக்கட்டளைத் தலைவர் கே.வெங்கடேசன் தலைமை வகித்தார். பயோ டெக் ரத்த பரிசோதனை நிலைய உரிமையாளர் டி.செல்வகுமார் முன்னிலை வகித்தார். ஸ்ரீ கிருஷ்ணா வித்யாலயா பள்ளி நிர்வாகி ஜெய்ஸ்ரீ கோதை வரவேற்றார். "மாற்றுத் திறனாளிகளுக்கு உதவுக' என்ற தலைப்பில் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜா.அருணாசலம் கருத்துரையாற்றினார்.
இதில், மாற்றுத் திறனாளிகளை ஊக்குவிக்கும் வகையில் வேட்டி, சேலை உள்ளிட்ட நல உதவிகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில், அறக்கட்டளைச் செயலாளர் எம்.சிவலிங்கம், கோமதி, மாணவர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். ஆசிரியை விஜயலட்சுமி நன்றி கூறினார்.