வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொதுமக்கள் புதிதாக பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்கவும், ஏற்கெனவே உள்ள பாஸ்போர்ட்டை புதுப்பித்துக் கொள்ளவும் சிறப்பு பாஸ்போர்ட் முகாம், வேலூர் தலைமை தபால் நிலையத்தில் இயங்கி வரும் பாஸ்போர்ட் சேவா கேந்திரா மையத்தில், சனிக்கிழமை (டிசம்பர் 16) நடைபெறுகிறது.
இதுகுறித்து சென்னை மண்டல பாஸ்போர்ட் அலுவலர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: புதுப்பித்தல் அல்லது புதிதாக பாஸ்போர்ட் பெறுவதற்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் தங்களுடைய விண்ணப்பத்தினை இணையதளத்துக்கு சென்று நேரடி கலந்தாய்வுக்கான முன்பதிவினை பதிவு செய்து அதற்குண்டான தொகையினை இணைய வழியாக செலுத்த வேண்டும். தொகையினை செலுத்திய பின்னர் அவர்களுக்கு விண்ணப்பப் பதிவு எண் வழங்கப்படும். இதில் குறிப்பிட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் நேரடி கலந்தாய்வுக்கு விண்ணப்பதார்கள் விண்ணப்பம் மற்றும் சான்றிதழ்களுடன் முகாமில் கலந்துகொள்ள வேண்டும். மேலும் விண்ணப்பதாரர்கள் முகாமில் இணையதள முகவரியில் பதிவு செய்த விண்ணப்பப் பதிவு எண் பதிவினை நகல் எடுத்து வரவேண்டும். இம்முகாமில் கலந்து கொள்வதற்கான முன்பதிவு டிசம்பர் 13-ஆம் தேதி மதியம் 2.30 மணியளவில் இணையதளத்தில் தொடங்கப்பட்டுள்ளது.
முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களிடம் உள்ள அசல் சான்றிதழ்களையும், சுய சான்று கையொப்பமிட்ட நகல்களையும் சமர்ப்பித்தல் வேண்டும். விருப்பமுள்ளவர்கள் இந்த சிறப்பு முகாமை
பயன்படுத்திக்கொள்ளலாம்.