வந்தவாசி அருகே சிறுமிக்கு நடைபெறவிருந்த திருமணத்தை அதிகாரிகள் புதன்கிழமை தடுத்து நிறுத்தினர்.
வந்தவாசியை அடுத்த அப்பந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் முருகன் (28). இவருக்கும், இதே கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமிக்கும் புதன்கிழமை திருமணம் நடத்த இரு வீட்டாரும் முடிவு செய்தனர்.
இந்த நிலையில், சிறுமிக்கு திருமணம் நடைபெறவுள்ளது குறித்து மாவட்ட குழந்தைகள் நல அலுவலகத்துக்கு புகார் வந்தது. இதையடுத்து, வந்தவாசி ஊர்நல அலுவலர் மனோன்மணி, கீழ்க்கொடுங்காலூர் காவல் ஆய்வாளர் குமார், உதவி ஆய்வாளர் ஆறுமுகம், ஓசூர் வருவாய் ஆய்வாளர் காஜா, கிராம நிர்வாக அலுவலர்கள் கனகராஜ், ரேவதி ஆகியோர் திருமணம் நடைபெறவிருந்த ஓசூர் கிராமத்தில் உள்ள திருமண மண்டபத்துக்கு புதன்கிழமை காலை சென்று விசாரணை நடத்தினர்.
விசாரணையின்போது, திருமண வீட்டார் காட்டிய ஆவணங்களின்படி, திருமணம் நடைபெறவிருந்த பெண்ணுக்கு 16 வயது மட்டுமே ஆகியிருந்ததால், அதிகாரிகள் திருமணத்தை தடுத்து நிறுத்தினர்.