வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகமும், ராணிப்பேட்டை பாரத மிகுமின் நிறுவனமும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்கள், பாரத மிகுமின் நிறுவன வசதிகளைப் பயன்படுத்திக் கொள்ளவும், ராணிப்பேட்டை பாரத மிகுமின் நிறுவனத்தில் பணிபுரியும் அதிகாரிகள் இப்பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும் புரிந்துணர்வு ஒப்பந்தம் வெள்ளிக்கிழமை செய்து கொள்ளப்பட்டது.
பாரத மிகுமின் நிறுவன வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், பல்கலைக்கழகத் துணை வேந்தர் க.முருகன், பாரத மிகுமின் நிறுவன செயல் இயக்குநர் கே.கலைச்செல்வன் ஆகியோர் பல்கலைக்கழகப் பதிவாளர் வி.பெருவழுதி முன்னிலையில் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டு பரிமாறிக் கொண்டனர்.
மேலும், கல்வி மற்றும் ஆராய்ச்சி வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கும் விதமாக தைவான், சவுதி அரேபியா, ஹாங்காங் போன்ற பன்னாட்டு பல்கலைக்கழகங்களுடனும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
இதன் மூலம் பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கி வரும் 128 கல்லூரிகளும், 6 உறுப்புக் கல்லூரிகள் மட்டுமல்லாது 4 மாவட்டங்களில் பரந்துவிரிந்துள்ள கிழக்குத் தொடர்ச்சி மலை இயற்கை வளங்களைப் பாதுகாக்கவும், கல்வி, தொழில் வளர்ச்சிக்கும் பாலமாக அமையும் எனத் தெரிவிக்கப்பட்டது. இதேபோல, வேலூர் நாராயணி கல்வி அறக்கட்டளை, பாரத மிகுமின் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.
நிகழ்ச்சியில் பல்கலைக்கழக உயிரி தொழில்நுட்பவியல் உதவிப் பேராசிரியர் அ.ராஜசேகர், பல்கலைக்கழக நாட்டு நலப் பணித் திட்ட ஒருங்கிணைப்பாளர் ம.செந்தில்குமார், துணைவேந்தரின் நேர்முக உதவியாளர் கே.பாஸ்கரன் மற்றும் பாரத மிகுமின் நிறுவன உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.