வேலூர் மத்திய சிறையில் கைதி தப்பிச் சென்ற சம்பவத்தைத் தொடர்ந்து சிறைக் காவலர்கள் 2 பேர் வெள்ளிக்கிழமை பணியிடை நீக்கம் செய்யப்பட்டனர்.
வேலூர் மத்திய சிறையில் கைதி சகாதேவன் வியாழக்கிழமை அதிகாலை தப்பிச் சென்றார். இதுகுறித்து வேலூர் பாகாயம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அமைக்கப்பட்ட தனிப்படை போலீஸார் தப்பிச் சென்ற கைதி சகாதேவனை கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூரில் கைது செய்தனர். விசாரணைக்குப் பிறகு அவர் மீண்டும் வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
கொம்புகளின் உதவியால் தப்பிச் சென்ற கைதி: சாரம் கட்டும் கொம்புகளை வைத்து சிறையின் மதில் சுவர் மீது ஏறி, வேட்டியை கட்டி கீழே இறங்கி கைதி சகாதேவன் தப்பிச் சென்றார் என்பது விசாரணையில் தெரியவந்தது.
இதையடுத்து சிறைக் காவலர்கள் ரவிச்சந்திரன், ஞானப்பிரகாசம் ஆகியோரை வேலூர் சிறைக் கண்காணிப்பாளர் சண்முகசுந்தரம் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.