வேலூர் விஐடி வேந்தர் ஜி.விசுவநாதனின் துணைவியார் ராஜேஸ்வரி அம்மையாரின் 10-ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, விளையாட்டுப் போட்டிகள் விஐடி வளாகத்தில் வியாழக்கிழமை நடைபெற்றன.
பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளில் 50 பள்ளிகளைச் சேர்ந்த மாணவர்கள் பங்கேற்றனர். அவர்களுக்கு பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இவற்றில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் விழா விஐடி ராஜாஜி அரங்கில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, உடற்கல்விப் பேராசிரியர் (பொறுப்பு) ஏ. ரூபன்குமார் வரவேற்றார். வேந்தர் ஜி.விசுவநாதன் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுக் கோப்பைகளையும், பள்ளிகளின் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசையும் வழங்கினார்.
துணைத் தலைவர் ஜி.வி. செல்வம், இணைத் துணைவேந்தர் நாராயணன் ஆகியோர் கலந்து கொண்டனர். உடற்கல்வி துணை இயக்குநர் என்.வி. தியாகசந்தன் நன்றி கூறினார்.