அனைவருக்கும் இடைநிலைக் கல்வி திட்டத்தின் கீழ் கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கான ஐந்து நாள் பணியிடை பயிற்சி வாலாஜாபேட்டை அரசினர்ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திங்கள்கிழமை தொடங்கியது.
9 மற்றும் 10-ஆம் வகுப்பு கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கான பயிற்சியின் தொடக்க நிகழ்ச்சிக்கு, பள்ளித் தலைமையாசிரியர் ஆர்.ரகுநாத் தலைமை வகித்தார். கணினி ஆசிரியர் என்.வினோத் கண்ணா வரவேற்றார்.
வேலூர் முதன்மைக் கல்வி அலுவலர் சா. மார்ஸ் சிறப்புரையாற்றினார். பயிற்சியில் அரக்கோணம், சோளிங்கர், நெமிலி, காவேரிப்பாக்கம், வாலாஜா ஒன்றியத்தில் உள்ள 96 பட்டதாரி ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.
முதன்மை கருத்தாளர்கள் குமணன், ரகுராமன், வெங்கடேசன், ஆதவன் உள்ளிட்டோர் கணித பட்டதாரி ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தனர். இப்பயிற்சி வெள்ளிக்கிழமை வரை நடைபெறுகிறது.