குடியாத்தம் அருகே தமிழ்நாடு வீட்டு வசதி வாரியக் குடியிருப்புப் பகுதியில் விளையாட்டுத் திடல் அமைக்க வேண்டாம் என அப்பகுதி மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.
இதுதொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலர் ரகுவிடம் அப்பகுதி மக்கள் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு விவரம்:
குடியாத்தம் ஒன்றியம், கொண்டசமுத்திரம் ஊராட்சி, ராஜா கோயில் கிராமத்தில் 140 வீடுகள் கொண்ட வீட்டு வசதி வாரிய குடியிருப்பு உள்ளது.
இந்த வளாகத்தில் விளையாட்டுத் திடல் அமைக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். விளையாட்டுத் திடலுக்கு தேர்வு செய்யப்பட்ட இடம் வீட்டு வசதி வாரிய குடியிருப்புக்குச் சொந்தமானது. அந்த இடத்தைத் தவிர்த்து, ஊராட்சிக்குச் சொந்தமான ஏதாவது ஒரு இடத்தில் விளையாட்டுத் திடல் அமைக்க வேண்டுகிறோம்.
மேலும், வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் குடிநீர் வசதி, தொடக்கப் பள்ளி வசதி, அங்கன்வாடி வசதி, காரிய மேடை ஆகியன அமைத்துத் தர வேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.