வேலூரில் திங்கள்கிழமை நடைபெற்ற குறைதீர் முகாமில் பயனாளிகள் 17 பேருக்கு நலத் திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன் வழங்கினார்.
மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர் முகாம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு தலைமை வகித்த மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ.ராமன், பட்டா மாறுதல், முதியோர் உதவித் தொகை, கடனுதவி, வேலைவாய்ப்பு உள்பட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 409 மனுக்களைப் பெற்றுக் கொண்டார். இந்த மனுக்கள் மீது துறைரீதியான நடவடிக்கைக்கு உத்தரவிடப்பட்டது.
தொடர்ந்து, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை சார்பில் 15 பேருக்கு மின்மோட்டார் பொருத்திய தையல் இயந்திரங்கள், மின்சாரம் தாக்கி உயிரிழந்த இரண்டு குடும்பங்களுக்கு முதலமைச்சர் பொது நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 75,000-க்கான காசோலை ஆகியவை வழங்கப்பட்டன. மாவட்ட வருவாய் அலுவலர் தா.செங்கோட்டையன், மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் செந்தில்குமாரி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.