ஆந்திர வனப்பகுதியில் செம்மரம் வெட்டச் சென்ற தொழிலாளி மாயமானது குறித்து ஆலங்காயம் போலீஸார் இளைஞரிடம் விசாரணை நடத்தி
வருகின்றனர்.
வேலூர் மாவட்டம், ஆலங்காயம் பெத்தூர் காலனியைச் சேர்ந்தவர் தேவராஜ் (எ) அமலு (32). கூலித் தொழிலாளி.
இவரை திருப்பத்தூரை அடுத்த பொம்மிகுப்பம் ஏ.கே.மோட்டூர் பகுதியைச் சேர்ந்த ஜலேந்திரன் கடந்த ஏப்ரல் மாதம் 17-ஆம் தேதி கூலி வேலைக்கு ஆந்திர மாநிலம் சின்னபள்ளிகுப்பம் வன பகுதியில் செம்மரம் வெட்ட அழைத்துச் சென்றதாகக்
கூறப்படுகிறது.
அப்போது, வனத்துறையினர் ரோந்து வந்ததைக் கண்டு செம்மரம் வெட்டிக் கொண்டிருந்த கூலித் தொழிலாளர்கள் தப்பி ஓடினராம். இதில், தேவராஜ் மின்வேலியில் சிக்கி இறந்துவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து அறிந்த தேவராஜ் மனைவி ராஜேஸ்வரி, கடந்த மே மாதம் 9-ஆம் தேதி ஆலங்காயம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், 80 நாள்கள் ஆகியும் போலீஸார் எவ்வித நடவடிக்கை எடுக்கவில்லை.
இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராஜேஸ்வரி கடந்த வியாழக்கிழமை மனு அளித்தார்.
இந்நிலையில், தேவராஜை ஆந்திராவுக்கு அழைத்துச் சென்ற ஜலேந்திரனை ஆலங்காயம் காவல் ஆய்வாளர் (பொறுப்பு) சுரேஷ், போலீஸார் திங்கள்கிழமை பிடித்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.