குடியாத்தம் அருகே விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடிக் கம்பம் சேதப்பட்டதைக் கண்டித்து அக்கட்சியினர் திங்கள்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
குடியாத்தத்தை அடுத்த கல்லப்பாடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கொடியை அக்கட்சியின் மாநிலத் தலைவர் தொல். திருமாவளவன் கடந்த சில நாள்களுக்கு முன் ஏற்றி வைத்தார்.
ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு மர்ம நபர்கள் அக்கொடிக் கம்பத்தை அடியோடு உடைத்து சேதப்படுத்தி விட்டுச் சென்றுள்ளனர்.
இதனைக் கண்டித்து அக்கட்சியின் வேலூர் மக்களவைத் தொகுதி பொறுப்பாளர் சிவ. செல்லப்பாண்டியன் தலைமையில் 100 க்கும் மேற்பட்டோர் கல்லப்பாடி பேருந்து நிறுத்தம் அருகே திங்கள்கிழமை காலை குடியாத்தம்} பரதராமி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதில் கட்சியின் நகரச் செயலர் கு. குமரேசன், நிர்வாகிகள் ம.ஜெ. வாசுதேவன், கல்லப்பாடி தமிழ், ராஜேஷ் , மகி, கு. விவேக், குரு கணேசன், ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தகவல் அறிந்ததும் நகர காவல் ஆய்வாளர் இருதயராஜ் தலைமையில் சென்ற போலீஸார் அவர்களை சமரசம் செய்தனர். கொடிக் கம்பத்தை சேதப்படுத்தியவர்களை விரைவில் கைது செய்வதாக உறுதி அளித்ததையடுத்து மறியல் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.