வேலூர் அருகே இளைஞர் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையதாக பெண் காவலர், அவரது கணவர் ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
வேலூர் அருகே அரியூர் சிவநாதபுரத்தைச் சேர்ந்த விவசாயி மணிக்கும், பக்கத்து வீட்டில் வசித்து வரும் ராமகிருஷ்ணனுக்குமிடையே நிலத்தகராறு இருந்து வந்துள்ளது. இதுதொடர்பாக இரு தரப்புக்கிடையே சனிக்கிழமை ஏற்பட்ட தகராறில் மணியின் மகன் சிவா (24) அடித்துக் கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக வழக்குப் பதிந்த அரியூர் போலீஸார், ராமகிருஷ்ணன் உள்பட இருவரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடையதாக நில அபகரிப்பு தடுப்புப் பிரிவில் காவலராகப் பணியாற்றி வந்த கீதா (44), அவரது கணவர் கன்னியப்பன் (50) ஆகியோர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனர்.
இதைத் தொடர்ந்து பெண் காவலர் கீதாவை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் பொ.பகலவன் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டார்.