வாலாஜாபேட்டையை அடுத்த கீழ்புதுப்பேட்டை தாங்கல் ஏரியில் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணியை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி முரளிதரன் சனிக்கிழமை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் எஸ்.ஏ. ராமன் தலைமை வகித்தார். வழக்குரைஞர்கள் சங்கச் செயலாளர் ஸ்ரீதரன் வரவேற்றார்.
மாவட்ட முதன்மை நீதிபதி ஆனந்தி, முதன்மை குற்றவியல் நீதிபதி தட்சிணாமூர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில், சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணிக்கு நீதிபதி ஆனந்தி, ரூ.10 ஆயிரமும், வாலாஜாபேட்டை வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் சுரேந்திரன் ஒரு லட்ச ரூபாய்க்கான காசோலையையும் வழங்கினர்.
இதில், நீதிபதிகள் முனிராஜ் (வாலாஜாபேட்டை), சாண்டில்யன் (ராணிப்பேட்டை), ராணிப்பேட்டை டி.எஸ்.பி. விஜயகுமார், கோட்டாட்சியர் ராஜலட்சுமி, வட்டாட்சியர் பிரியா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மாவட்டத்தில் 15 சதவீத பணிகளே நிறைவு: இதேபோல், வாணியம்பாடியை அடுத்த நாட்டறம்பள்ளி வட்டத்துக்கு உள்பட்ட சந்திரபுரம், பாரண்டஹள்ளி, புதுப்பேட்டை, நாட்டறம்பள்ளி ஏரியில் இருக்கும் சீமைக் கருவேல மரங்களை அகற்றும் பணிகளை மதுரை உயர்நீதிமன்ற கிளை வழக்குரைஞர்கள் அலுமேலு, சிவசுதாகர், அருண்குமார் ஆகியோர் சனிக்கிழமை ஆய்வு செய்தனர்.
அப்போது அவர்கள் கூறுகையில், "வேலூர் மாவட்டத்தில், 10-15 சதவீதம் சீமைக் கருவேல மரங்களே அகற்றப்பட்டுள்ளன. இவற்றை 100 சதவீதம் அகற்றி, அந்த இடங்களில் பலன் தரும் மற்ற மரங்களை நட்டு, பராமரிக்க வேண்டும்' என்றனர்.
இந்த ஆய்வின்போது, வட்டாட்சியர் சச்சிதானந்தன், பேரூராட்சி செயல் அலுவலர் நிசாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
திருப்பத்தூரில்...
திருப்பத்தூர், மார்ச் 26: திருப்பத்தூர் பெரிய ஏரியில் சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் பணியை சார் ஆட்சியர் கார்த்திகேயன் அண்மையில் தொடங்கி வைத்தார்.
தூயநெஞ்சக் கல்லூரி மாணவர்கள், "தண்ணீர், தண்ணீர்' அமைப்பினர் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முன்னதாக நடைபெற்ற நிகழ்ச்சியில், கூடுதல் மாவட்ட நீதிபதி ஏ.முருகன், குற்றவியல் நீதி துறை நடுவர் மோகன்ராஜ், சிறப்பு சார்பு நீதிபதி ஆர்.நந்தினி, முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி ஜி.ராதாகிருஷ்ணன், குற்றவியல் நீதித்துறை நடுவர்-2 பி.சுமிதா, கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிபதி கே.ஜோதி, குற்றவியல் நீதித்துறை நடுவர்-3 சி.ராஜசேகர், வட்டாட்சியர் டி.ஸ்ரீராம், டி.எஸ்.பி. பன்னீர்செல்வம், நகராட்சி ஆணையாளர் (பொறுப்பு) எஸ்.அசோக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.