ஆம்பூரில் லாரியில் கடத்தி வரப்பட்ட ரூ.25 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட போதைப் பொருள்களை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு பறிமுதல் செய்தனர்.
பெங்களூரிலிருந்து தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் சென்னைக்கு கடத்தப்படுவதாக வேலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளரின் தனிப்பிரிவு போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் ஆம்பூர் பேருந்து நிலையம் அருகே ஆம்பூரைச் சேர்ந்த தனிப்பிரிவு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை இரவு வாகனச்
சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, பெங்களூரிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற லாரியை நிறுத்தி சோதனையிட்டனர்.
இதில், லாரியில் சுமார் ரூ.25 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட ஹான்ஸ் போதைப் பொருள்கள் கடத்தப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து லாரியுடன், போதைப் பொருள்களை போலீஸார் பறிமுதல் செய்தனர். மேலும், லாரி ஓட்டுநரான பள்ளிகொண்டா பகுதியைச் சேர்ந்த யுவராஜை (32) கைது செய்தனர். இதுகுறித்து ஆம்பூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.