வாணியம்பாடி அருகே அரசுப் பேருந்து மோதியதில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த தலைமைக் காவலர் உயிரிழந்தார்.
வேலூர், சலவன்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் பார்த்தீபன் (53). இவர் காவலூர் காவல் நிலையத்தில் தலைமைக் காவலராகவும், கூடுதல் போலீஸார் ரோந்து வாகனத்தின் ஓட்டுநராகவும் பணியாற்றி வந்தார். இந்நிலையில், வாணியம்பாடி - லட்சுமிபுரம் வரை செல்லும் ரோந்து வாகனத்தில் வெள்ளிக்கிழமை காலை ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார்.
வெலக்கல்நத்தம் அருகே 6 வழிச் சாலையில் மல்லப்பள்ளி கூட்டுச் சாலை அருகே பணியில் ஈடுபட்டிருந்தபோது, சாலையோரம் ரோந்து வாகனத்தை நிறுத்தினார்.
பின்னர், நெடுஞ்சாலையில் விபத்தைத் தடுக்க வைத்திருந்த இரும்பு தடுப்புகளில் ஒட்டுவில்லையை ஒட்டுவதற்காக சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது சென்னையிலிருந்து ஒசூர் நோக்கிச் சென்ற அரசுப் பேருந்து பார்த்தீபன் மீது மோதியது.
இதில் தலையில் பலத்த காயமடைந்த பார்த்தீபன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்த வாணியம்பாடி டிஎஸ்பி சுந்தரம் மற்றும் நாட்டறம்பள்ளி போலீஸார் சம்பவ இடத்துக்குச் சென்று பார்த்தீபனின் சடலத்தை மீட்டு, திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸார் வழக்குப் பதிந்து, விபத்துக்குக் காரணமான அரசுப் பேருந்து ஓட்டுநர் அரக்கோணத்தைச் சேர்ந்த சீனிவாசனை (43) கைது செய்தனர். இறந்த பார்த்தீபனுக்கு மனைவி மற்றும் 2 மகன்கள் உள்ளனர்.