அரக்கோணம் ரயில் நிலையத்தில் கடந்த 14-ஆம் தேதி ஏற்காடு விரைவு ரயில் தடம் புரண்டது. இந்த சம்பவம் தொடர்பாக ரயிலின் இரு ஓட்டுநர்கள் உள்பட 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையிலிருந்து ஈரோடு சென்று கொண்டிருந்த ஏற்காடு விரைவு ரயில் கடந்த 14-ஆம் தேதி அரக்கோணம் ரயில் நிலையத்தில் தடம்புரண்டது. ரயிலின் என்ஜின், 3 பெட்டிகள் தண்டவாளத்தை விட்டு இறங்கின. இச்சம்பவத்தால் மறுநாள் மாலை வரை அந்த வழியே ரயில் சேவையில் பாதிப்பு
ஏற்பட்டது.
இந்த விபத்து குறித்து சிக்னல் பிரிவினர், தண்டவாள பராமரிப்பு பிரிவினர் மாறி, மாறி குற்றம்சாட்டினர். இந்நிலையில், தெற்கு ரயில்வே உதவி பொதுமேலாளர் ஏ.கே.மிஸ்ரா, கோட்ட ரயில்வே மேலாளர் நவீன் குலாட்டி ஆகியோர் விசாரணை நடத்தினர்.
நான்கு நாள்களாக நடைபெற்ற விசாரணைக்குப் பின்னர், ஏற்காடு விரைவு ரயிலின் தலைமை ஓட்டுநர் ஜெயபிரதாபன், துணை ஓட்டுநர் மோகன், ரயிலின் காப்பாளர் ஸ்ரீதர், முதுநிலை சிக்னல் அலுவலர் நரேஷ்குமார், தண்டவாள பராமரிப்பு பிரிவு அலுவலர் சின்னய்யா, அரக்கோணம் ரயில் நிலைய அதிகாரி பன்னீர்செல்வம் ஆகியோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். குறிப்பிட்ட இடத்தில் சிக்னல் கோளாறு இருந்தது. இதனை சரிசெய்யும் பணி தாமதமாக நடைபெற்றதால் ரயில்களை குறைவான வேகத்தில் இயக்க ஓட்டுநர்களுக்கு தாமதமாக அறிக்கை வழங்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், அறிவுறுத்தப்பட்டிருந்ததை விட கூடுதல் வேகத்தில் ரயிலை இயக்கியதாக ஓட்டுநர்களும், அறிக்கையை ஓட்டுநர்களுக்கு தாமதமாக அளித்ததாக அலுவலர்களும், பணியை வேகமாக முடிக்காததாக சிக்னல், தண்டவாளப்பிரிவு அதிகாரிகளும் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பாக தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.