முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று வேலூர் சிறையில் உள்ள முருகனிடமிருந்து, செல்லிடப்பேசி பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு விசாரணை மே 22-ஆம் தேதி ஒத்திவைக்கப்பட்டது.
வேலூர் மத்திய சிறையில் வைக்கப்பட்டுள்ள முருகனிடமிருந்து கடந்த மார்ச் 25-ஆம் தேதி விலையுயர்ந்த செல்லிடப்பேசி, சிம்கார்டு, சார்ஜர் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன. வேலூர் முதலாவது குற்றவியல் நீதித் துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வரும் வழக்கு விசாரணைக்கு பலத்த போலீஸ் பாதுகாப்புடன் முருகன் வியாழக்கிழமை அழைத்து வரப்பட்டு ஆஜர்படுத்தப்பட்டார்.
நீதித் துறை நடுவர் அலிசியா வழக்கு விசாரணையை வருகிற மே 22-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இதனைத் தொடர்ந்து முருகன் போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டு சிறையில் வைக்கப்பட்டார்.