குடியாத்தம் அருகே ஓடும் ரயிலில் மூதாட்டியிடம் 10 பவுன் நகையை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.
சென்னை, வில்லிவாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் லீலாவதி (65). இவர் வெள்ளிக்கிழமை இரவு சென்னையிலிருந்து பழனி செல்லும் விரைவு ரயிலில் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டியில் பயணம் செய்தார். நள்ளிரவு 12 மணியளவில், இந்த ரயில் குடியாத்தம் ரயில் நிலையம் அருகே சிக்னலுக்காக மெதுவாக சென்று கொண்டிருந்தது. அப்போது, ஜன்னல் அருகில் அமர்ந்திருந்த லீலாவதியின் கழுத்தில் இருந்த 10 பவுன் சங்கிலியை மர்ம நபர்கள் கைவிட்டு பறித்தனர். இதுகுறித்து, ஜோலார்பேட்டை ரயில்வே காவல் நிலையத்தில் லீலாவதி சனிக்கிழமை புகார் அளித்தார். காட்பாடி, ஜோலார்பேட்டை பகுதிகளில் சிக்னலுக்காக காத்திருக்கும் ரயில்களில் பயணிகளிடம் நகைப் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.