குடிநீர் வழங்கக் கோரி வட்டார வளர்ச்சி அலுவலகம் முற்றுகை

வாலாஜாபேட்டையை அடுத்த தேவதானம் கிராமத்தில் கடந்த 2 மாதங்களாக சரியான முறையில் குடிநீர் வழங்காததாகக் கூறி வாலாஜா வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை

வாலாஜாபேட்டையை அடுத்த தேவதானம் கிராமத்தில் கடந்த 2 மாதங்களாக சரியான முறையில் குடிநீர் வழங்காததாகக் கூறி வாலாஜா வட்டார வளர்ச்சி அலுவலகத்தை பொதுமக்கள் திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
வாலாஜாபேட்டை ஒன்றியம், வன்னிவேடு ஊராட்சிக்குள்பட்ட கீழ்தேவதானம் மற்றும் ஜெ.ஜெ. நகர் கிராமங்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இங்கு இரண்டு மேல்நிலை நீர்த் தேக்கத் தொட்டிகள் உள்ளன. இதில் ஒன்று பழுதடைந்து பயனற்ற நிலையில் உள்ளது. இந்நிலையில், இப்பகுதியில் கடந்த 2 மாதங்களாக குடிநீர் சரியான முறையில் விநியோகம் செய்யப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து இப்பகுதி மக்கள், ஊராட்சி செயலாளர் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் புகார் தெரிவித்துள்ளனர். மேலும் தங்கள் பகுதியில் குடிநீர் பிரச்னை குறித்து மே மாதம் நடந்த கிராம சபைக் கூட்டத்தில் புகார் தெரிவித்துள்ளனர். ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லையெனக் கூறப்படுகிறது.
இதில் ஆத்திரமடைந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் திங்கள்கிழமை காலிக் குடங்களுடன் வாலாஜாபேட்டையில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர்.
தகவலறிந்த வாலாஜா வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெயஸ்ரீ, போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். விரைவில் குடிநீர் பிரச்னையைத் தீர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததின் பேரில், போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டது.
வாணியம்பாடியில்...
நாட்டறம்பள்ளி அருகே குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலி குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாட்டறம்பள்ளியை அடுத்த பந்தாரபள்ளி ஊராட்சி அரசனப்பள்ளியில் 250-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் கடந்த சில மாதங்களாக ஊராட்சி நிர்வாகம் மூலம் சரிவர குடிநீர் வழங்கவில்லையாம்.
இதனால் ஆத்திரமடைந்த மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் திங்கள்கிழமை காலை குப்பம் சாலையில் கோமூட்டியூர் கூட்டு சாலை அருகே காலிக் குடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்த நாட்டறம்பள்ளி போலீஸார் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அப்போது டிராக்டர் மூலம் குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும், 15 நாள்களில் சீரான குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுப்பதாகவும் வட்டார வளர்ச்சி அலுவலர் உறுதி கூறினார். இதையடுத்து அனைவரும் கலைந்து சென்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com