திருப்பத்தூர் அருகே மர்ம நபர்கள் தன்னை கடத்தி பெட்ரோல் ஊற்றி எரிக்க முயன்றதாக பள்ளி மாணவர் நாடகமாடியது பரபரப்பை ஏற்படுத்தியது.
திருப்பத்தூரை அடுத்த ஜோன்றம்பள்ளி ஏரிக்கோடி பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (48). தொழிலாளியான இவரது மனைவி செல்வி. இவர்களுக்கு கோவிந்தன் (14) என்ற மகனும், ஒரு மகளும் உள்ளனர்.
குடும்பத் தகராறு காரணமாக பிரிந்து, முருகன் திருப்பூரிலும், செல்வி பெங்களூருவிலும் வேலை செய்து வருகின்றனர். மகன் கோவிந்தனும், மகளும் ஜோன்றம்பள்ளியில் உள்ள தாத்தா வீட்டில் தங்கியுள்ளனர். இதில், கோவிந்தன் வெங்களாபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9-ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், செவ்வாய்க்கிழமை காலை கோவிந்தன் வழக்கம் போல பள்ளிக்கு சென்றுள்ளார். அப்போது, அவர் உடல் முழுவதும் தீப் பிடித்து எரிந்த நிலையில் சாலையில் ஓடி வந்துள்ளார். இதைப் பார்த்த பொதுமக்கள், கோவிந்தனை மீட்டு திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். விசாரணையில், தான் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது 2 மர்ம நபர்கள் வழிமறித்து, முகத்தை மூடி அருகே உள்ள மாந்தோப்புக் கொண்டு சென்று பெட்ரோல் ஊற்றி தீவைத்து எரிக்க முயன்றதாகத் தெரிவித்தார்.
மாணவன் நடத்திய நாடகம்: தகவலறிந்த திருப்பத்தூர் கிராமிய போலீஸார் மருத்துவமனைக்குச் சென்று, கோவிந்தனிடம் விசாரணை நடத்தினர். இதில், பள்ளியில் சக மாணவரின் பர்ஸை திருடியது மற்ற மாணவர்களுக்கு தெரிந்துவிட்டதால் பள்ளிக்குச் செல்ல விருப்பம் இல்லாமல் கோவிந்தன் தானக்கு தானே தீவைத்துக் கொண்டு நாடகமாடியது தெரியவந்தது. இதுகுறித்து போலீஸார் அவரது குடும்பத்தினரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேல் சிகிச்சைக்காக கோவிந்தன் தருமபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.