வாணியம்பாடி நகரம் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் மழைநீர் தேங்கிய இடங்களை சார் ஆட்சியர் கார்த்திகேயன் புதன்கிழமை நேரில் ஆய்வு செய்தார்.
வாணியம்பாடி நகரம் மற்றும் அதை ஒட்டியுள்ள பகுதிகளில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது.
இதனால் கோணாமேடு, நேதாஜி நகர், காமராஜபுரம், வளையாம்பட்டு உள்ளிட்ட பகுதிகளில் சாலைகளிலும், குடியிருப்புப் பகுதிகளிலும் கழிவுநீருடன் மழைநீர் கலந்துள்ளதால் பொதுமக்கள் நடத்து செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், தொற்று நோய் ஏற்படும் அபாயம் உள்ளதாக நகராட்சி நிர்வாகத்திடம் அப்பகுதி மக்கள் முறையிட்டனர்.
இந்நிலையில், திருப்பத்தூர் சார் ஆட்சியர் கார்த்திகேயன், வாணியம்பாடி நகரம் மற்றும் வளையாம்பட்டு பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள இடங்களை புதன்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும், வளையாம்பட்டு பகுதியில் நகராட்சிக்குச் சொந்தமான குப்பைக் கிடங்கு அமைந்துள்ள இடத்தையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
அப்போது மழைநீருடன் கழிவுநீர் தேங்கியுள்ளதை உடனடியாக அப்புறப்படுத்த அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இந்த ஆய்வின் போது வட்டாட்சியர் முரளிகுமார், நகராட்சி ஆணையர் கோபு, மேலாளர் அஜீசுதீன், நகரமைப்பு அலுவலர் சண்முகம், ஆய்வாளர் வெங்கடேசன் உள்ளிட்டோர்
உடனிருந்தனர்.