காட்பாடியில் குடியிருப்புப் பகுதியில் சூழ்ந்த மழைநீர், கால்வாய் மூலம் பாலாற்றில் கலக்கும் வகையில் மாநகராட்சி அதிகாரிகள் பொக்லைன் இயந்திரம் மூலம் வியாழக்கிழமை நடவடிக்கை மேற்கொண்டனர்.
காட்பாடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் பெய்த மழை காரணமாக பழைய காட்பாடி, பவானி நகர், முத்தமிழ் நகர் ஆகிய பகுதிகளில் இருந்து வெள்ளநீர் வி.ஜி.ராவ் நகரில் குடியிருப்புப் பகுதியில் சூழ்ந்தது.
இதனால், பொதுமக்கள் வீடுகளுக்குள் முடங்கினர். இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் பெ.குபேந்திரனுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து அவர் அப்பகுதியை வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டு நீர் வழிந்தோடி பாலாற்றில் கலக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
அதன்பேரில், 1-ஆவது மண்டல உதவி ஆணையர் என்.மதிவாணன், பொறியாளர் ஆறுமுகம் ஆகியோர் நீர் வழிந்தோட இடையூறாக இருந்த பகுதியில் பொக்லைன் இயந்திரம் மூலம் தோண்டி சரிசெய்தனர். இதன் காரணமாக வி.ஜி.ராவ் பகுதியில் தேங்கியுள்ள மழைநீர் வேகமாக வழிந்தோடி பாலாற்றுக்கு செல்கிறது.