ராணிப்பேட்டை நான்கு வழி அணுகுச் சாலையில் தேங்கியிருந்த மழைநீரை அகற்றி வடிகால் வசதி ஏற்படுத்தி தர நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை எம்எல்ஏ ஆர்.காந்தி அறிவுறுத்தினார்.
வாலாஜாபேட்டை-கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் ராணிப்பேட்டை பாலாற்று மேம்பாலத்தின் கீழ் அணுகு சாலை செல்கிறது. இந்த அணுகு சாலை வழியாக நாள்தோறும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்நிலையில், இந்த அணுகு சாலை சந்திப்பில் கடந்த சில மாதங்களாக பெய்த மழையால் நீர் தேங்கி, வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதுகுறித்து தினமணி நாளிதழில் கடந்த 2-ஆம் தேதி ஆராய்ச்சிமணி பகுதியில் படத்துடன் செய்தி
வெளியானது.
இதையடுத்து ராணிப்பேட்டை எம்எல்ஏ ஆர்.காந்தி, நான்கு வழி அணுகுச் சாலையை புதன்கிழமை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகளை நேரில் அழைத்து ஆலோசனை நடத்தி தேங்கியுள்ள மழை நீரை உடனடியாக அகற்றி, வடிகால் வசதி ஏற்படுத்தும் பணியைத் தொடங்குமாறு அறிவுறுத்தினார்.
இதனால், பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சியடைந்தனர்.