தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பேரவைத் தலைவர் தனபால் ஆகியோரை மிரட்டும் வகையில் டிடிவி தினகரன் பேசியதாக, அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரக்கோணம் நகர மற்றும் கிராமிய காவல் நிலையங்களில் அதிமுகவினர் புகார் அளித்தனர்.
கடந்த சில தினங்களுக்கு முன் தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், அதிமுக (அம்மா அணி) துணைப் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி மற்றும் பேரவைத் தலைவர் தனபால் ஆகியோரை மிரட்டும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், அரக்கோணம் நகரக் காவல் நிலையத்தில், அதிமுக நகர இளைஞரணிச் செயலாளர் கே.பி.பாண்டுரங்கன், ஏ.எல்.நாகராஜன் ஆகியோர் தனித்தனியே புகார் அளித்தனர்.
அதில், முதல்வர் மற்றும் பேரவைத் தலைவரை மிரட்டும் வகையில் பேசிய டிடிவி தினகரன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கூறியிருந்தனர். இப்புகாரை நகர ஆய்வாளர் நாகராஜன் பெற்றுக் கொண்டார்.
இதே போல, அரக்கோணம் கிராமிய காவல் நிலையத்தில் காவேரிபாக்கம் ஒன்றிய அதிமுக முன்னாள் செயலாளர் பழனி, வளர்புரம் ஊராட்சிச் செயலாளர் முத்தப்பன், சோகனூர் கிளைச் செயலாளர் பரந்தாமன் ஆகியோரும் தனித்தனியே புகார் மனு அளித்தனர். இவற்றை கிராமிய ஆய்வாளர் அண்ணாதுரை பெற்றுக் கொண்டார்.