நாட்டறம்பள்ளி அருகே மர்மக் காய்ச்சல் பாதிப்பால் 8 மாத ஆண் குழந்தை வியாழக்கிழமை இறந்தது.
நாட்டறம்பள்ளி, பச்சூர், வெலகல்நத்தம், நாயணசெருவு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில மாதங்களாக மர்மக் காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
இந்நிலையில், வெலகல்நத்தம் ஊராட்சி, நந்திபெண்டா பட்டாளம்மன் கோயில் பகுதியைச் சேர்ந்த விவசாயி கார்த்திக்குமாரின் 8 மாத ஆண் குழந்தை பிரதீஷ், கடந்த 10 நாள்களாக தீவிர காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தது. கடந்த திங்கள்கிழமை காலை வீட்டில் இருந்த குழந்தை திடீரென சுயநினைவை இழந்தது. இதையடுத்து பெற்றோர் குழந்தையை உடனடியாக கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.
காய்ச்சல் குறையாததால் பெங்களூரு தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் சேர்த்தனர். இந்நிலையில் வியாழக்கிழமை மாலை 5 மணிக்கு குழந்தை இறந்தது.