தனது தொகுதியைச் சேர்ந்த பெண்ணின் ரத்தப்
புற்றுநோய் சிகிச்சைக்காக பிரதமர் நிவாரண நிதியில் இருந்து ரூ. 3 லட்சத்தை எம்.பி. கோ.அரி பெற்றுத் தந்தார்.
அரக்கோணம் நாடாளுமன்ற தொகுதியில் உள்ள தாராபடவேடு, குமரப்ப நகர், 11-ஆவது தெருவில் வசிக்கும் பிரேம்நாத்தின் மகள் மகாலட்சுமி (33), கடந்த பல ஆண்டுகளாக ரத்தப் புற்று நோயால் அவதிப்பட்டு வந்தார். இவரின் மருத்துவச் சிகிச்சைக்காக ரூ. 6 லட்சம் தேவைப்பட்டதாம். இதையறிந்த அரக்கோணம் எம்.பி. கோ.அரி, பிரதமர் நிவாரண நிதியில் இருந்து மகாலட்சுமியின் மருத்துவ சிகிச்சைக்காக நிதியுதவிக்கு பரிந்துரை செய்தார். அவரின் பரிந்துரை ஏற்கப்பட்டதைத் தொடர்ந்து, புது தில்லியில் உள்ள பிரதமரின் அலுவலகத்தில் இருந்து எம்.பி.க்கு தகவல் அனுப்பப்பட்டது.
அதில், மகாலட்சுமியின் சிகிச்சைக்காக மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்டு ரூ. 3 லட்சம் நிதி அனுப்பப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவல் எம்.பி. அலுவலக செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.