வாணியம்பாடியில் இருவேறு சம்பவங்களில் இருவர் இறந்தனர்.
வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ஏழுமலை (25). பட்டதாரியான இவர், ஒசூரில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இந்நிலையில், தீபாவளி பண்டிகைக்காக ஊருக்கு வந்த ஏழுமலைக்கு, அவரது தந்தை ராமர் நீச்சல் கற்றுக் கொடுக்க வியாழக்கிழமை கொல்லக்கொட்டாய் பகுதியில் உள்ள கிணற்றுக்கு அழைத்து சென்றாராம். அப்போது இரு முறை பழகிய பிறகு கயிறு இல்லாமல் நீச்சல் அடிக்க முயன்ற ஏழுமலை தண்ணீரில் மூழ்கினார்.
தகவலறிந்த வாணியம்பாடி தீயணைப்புத் துறையினர் அங்கு வந்து கிணற்றில் இருந்து ஏழுமலையை சடலமாக மீட்டனர். பின்னர், பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து வாணியம்பாடி நகர போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மற்றொரு சம்பவம்: வாணியம்பாடியை அடுத்த மேல் நிம்மியம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் நந்தகோபால் (28). தொழிலாளியான இவர், வியாழக்கிழமை கொண்ணாம்பட்டி ஏரியில் குளிக்கச் சென்றார். பிறகு, அங்குள்ள மலைப் பாதையில் வரும் நீர்வீழ்ச்சி வேடிக்கைப் பார்க்க பாறையில் ஏறிய போது, கால் தவறி விழுந்ததில் பலத்த காயமடைந்தார்.
அருகே இருந்தவர்கள் அவரை மீட்டு வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், வாணியம்பாடி தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு, சிறிது நேரத்தில் நந்தகோபால் இறந்தார்.
இதுகுறித்து வாணியம்பாடி கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.