ஆம்பூர் அருகே பாலாற்று வெள்ளத்தில் சிக்கி இருவர் இறந்தனர்.
ஆம்பூர் அருகே பெரியாங்குப்பம் கிராமத்தைச் சேர்ந்த கவிதாவின் மகள் ஜனனி (11). இவர், அங்குள்ள பள்ளியில் 6-ஆம் வகுப்பு படித்து வந்தார். வியாழக்கிழமை காலை அப்பகுதியில் உள்ள சிறுமிகளுடன் ஆலாங்குப்பம் கிராமத்தின் பாலாற்றுக்குச் சென்றாராம். ஆற்றில் விளையாடிய போது திடீரென வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டார்.
தகவலறிந்த தீயணைப்புப் படையினர் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். பிறகு, ஜனனி சடலமாக மீட்கப்பட்டார். இதையடுத்து பிரேதப் பரிசோதனைக்காக அவரது சடலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதேபோல, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர் சடலமாக புதன்கிழமை மீட்கப்பட்டார். ஆம்பூர் அருகே வடபுதுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த மூர்த்தி (38), ரமேஷ் (28) ஆகிய இருவரும் பச்சகுப்பம் பாலாற்று தரைப்பாலம் அருகே கடந்த 16-ஆம் தேதி குளிக்கச் சென்றனர். அப்போது பாலாற்று வெள்ளத்தில் இருவரும் அடித்துச் செல்லப்பட்டனர். இதில், மூர்த்தியை தீயணைப்புப் படையினர் உயிருடன் மீட்டனர். ஆனால், ரமேஷ் கிடைக்கவில்லை.
இந்நிலையில், புதன்கிழமை பச்சகுப்பம் பகுதி பாலாற்றில் அவரது சடலம் மீட்கப்பட்டது. இதையடுத்து பிரேதப் பரிசோதனைக்காக அவரது சடலம் ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இந்த இரு சம்பவங்கள் குறித்தும் ஆம்பூர் கிராமிய போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.