நாட்டறம்பள்ளி அருகே கிணற்றில் குளிக்கச் சென்றபோது தண்ணீரில் மூழ்கி பள்ளி மாணவர் இறந்தார்.
நாட்டறம்பள்ளியை அடுத்த பெரியமோட்டூர் கிராமத்தைச் சேர்ந்தவர் தொழிலாளி மோகன்ராஜின் மகன் மெய்யரசன் (12). இவர், கேதாண்டப்பட்டியில் உள்ள அரசினர் மேல்நிலைப் பள்ளியில் 7-ஆம் வகுப்புப் படித்து வந்தார்.
இந்நிலையில், வெள்ளிக்கிழமை காலை பள்ளிக்குச் செல்ல வீட்டிலிருந்து சைக்கிளில் புறப்பட்ட மெய்யரசன், வழியில் சில மாணவர்களுடன் பெருமாள் கோயில் அருகே உள்ள கிணற்றில் குளிக்கச் சென்றார். கிணற்றில் குளித்துக் கொண்டிருந்த போது, தண்ணீரில் மூழ்கி மெய்யரசன்
இறந்தார்.
இதையடுத்து அருகே இருந்தவர்கள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் அங்கு வந்த நாட்டறம்பள்ளி போலீஸார் மாணவரின் சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாட்டறம்பள்ளி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.