குழந்தை இறந்து பிறந்ததால்அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டம்

திருப்பத்தூரில் பிரசவத்தின் போது, குழந்தை இறந்து பிறந்ததால் உறவினர்கள் வெள்ளிக்கிழமை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு நுழைவு வாயில் கதவைப் பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பத்தூரில் பிரசவத்தின் போது, குழந்தை இறந்து பிறந்ததால் உறவினர்கள் வெள்ளிக்கிழமை அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு நுழைவு வாயில் கதவைப் பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் அருகே பெரியார் நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராஜேஷ். தொழிலாளியான இவருக்கு, சோனியா (22) என்ற மனைவியும், கிரிஷ் (2) என்ற மகனும் உள்ளனர். நிறைமாத கர்ப்பிணியான சோனியா, திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் பரிசோதனை மேற்கொண்டு வந்தார்.
இந்நிலையில், சோனியா வியாழக்கிழமை பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு வந்த போது, மருத்துவர்கள் அவருக்கு பிரசவத்துக்கென ஊசி போட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
இதில், வெள்ளிக்கிழமை மாலை சோனியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதையடுத்து, குடும்பத்தினர் அவரை திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, சோனியாவுக்கு பெண் குழந்தை இறந்து பிறந்தது. இதனால், ஆத்திரமடைந்த அவரது உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு நுழைவு வாயில் கேட்டை பூட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவலறிந்த திருப்பத்தூர் நகர போலீஸார் அங்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து நுழைவுவாயில் திறக்கப்பட்டது.
இதுகுறித்து சோனியாவின் உறவினர்கள் கூறியதாவது:
சோனியாவை வியாழக்கிழமை காலை பரிசோதனைக்காக அழைத்து வந்தோம். அன்று மாலை வரை காக்க வைத்து, ஊசி போட்டு வீட்டிற்கு அனுப்பி வைத்தனர். வெள்ளிக்கிழமை சோனியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து இங்கு அனுமதிக்கப்பட்டார். ஆனால் மருத்துவர்கள் முறையான சிகிச்சை அளிக்காததால் குழந்தை இறந்து பிறந்ததாகக் கூறினர்.
இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது:
சோனியாவுக்கு முதல் குழந்தை அறுவை சிகிச்சை மூலம் பிறந்துள்ளது. இரண்டாவது குழந்தையும் அறுவை சிகிச்சை மூலம் பிரசவம் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தோம்.
அதன்படி, செப்டம்பர் 19-ஆம் தேதி பிரசவ நாள் குறித்து கொடுக்கப்பட்டது. ஆனால், வெள்ளிக்கிழமை சோனியாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து சிகிச்சை மேற்கொண்டோம்.
ஆனால் பனிக்குடம் உடைந்ததால் குழந்தையை உயிருடன் மீட்பதில் சிரமம் ஏற்பட்டது. இதனால் குழந்தை இறந்தது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com