வாணியம்பாடி அருகே 15 வயது சிறுமிக்கு நடக்கவிருந்த திருமணத்தை அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தடுத்து நிறுத்தினர்.
வாணியம்பாடியை அடுத்த மதனாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த மணிகண்டனுக்கும் (30) அதே பகுதியைச் சேர்ந்த அவரது உறவினரான 15 வயது சிறுமிக்கும் பெற்றோர்களால் நிச்சயம் செய்யப்பட்டு வெள்ளிக்கிழமை காலை திருமணம் நடக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதையறிந்த வேலூர் சமூக நலத் துறை அலுவலர்கள், வாணியம்பாடி வருவாய்த் துறையினர் மற்றும் கிராமிய போலீஸார் வியாழக்கிழமை இரவு 9 மணிக்கு அங்கு சென்று விசாரித்தனர். பின்னர் 15 வயது சிறுமிக்கு திருமணம் செய்து வைப்பது சட்டப்படி குற்றம் என்று பெற்றோரிடம் தெரிவித்தனர்.
இதையடுத்து இரு தரப்பினரும் திருமணத்தை நிறுத்தி வைப்பதாக அதிகாரிகளிடம் தெரிவித்தனர்.