குடியாத்தத்தில் பேருந்து மோதியதில் காயமடைந்தவருக்கு நீதிமன்ற உத்தரவுப்படி இழப்பீடு வழங்காததால் வெள்ளிக்கிழமை அரசுப் பேருந்து ஜப்தி செய்யப்பட்டது.
குடியாத்தம் செருவங்கி, நேருஜி நகரைச் சேர்ந்தவர் பெருமாள் (32). தனியார் நிறுவன ஊழியர். இவர், கடந்த 2008-ஆம் ஆண்டு மே மாதம் அரக்கோணத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு பைக்கில் சென்றார். அப்போது, அரசுப் பேருந்து மோதியதில் பெருமாள் காயமடைந்தார். காயமடைந்த தனக்கு இழப்பீடு கோரி குடியாத்தம் சார்பு நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் பெருமாளுக்கு ரூ. 3.84 லட்சம் இழப்பீடு வழங்குமாறு அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 2016-ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது.
நீதிமன்ற உத்தரவுப்படி போக்குவரத்துக் கழகம் இழப்பீடு வழங்காததால் நீதிமன்றத்தில் நிறைவேற்று மனுவை பெருமாள் தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி தயாநிதி, வட்டியுடன் ரூ. 4.55 லட்சம் பெருமாளுக்கு வழங்க உத்தரவிட்டார். தவறினால் 2 அரசுப் பேருந்துகளை ஜப்தி செய்ய உத்தரவிட்டார். அதன்படி குடியாத்தம் பேருந்து நிலையத்தில் வெள்ளிக்கிழமை சென்னை செல்லவிருந்த அரசுப் பேருந்தை நீதிமன்ற ஊழியர்கள் ஜப்தி செய்தனர்.