பொன்னை சின்ன ஏரி மதகு விரிசல் மணல் கொண்டு அடைப்பு

பொன்னை சின்ன ஏரி மதகு விரிசல், மணல் மூட்டைகள் கொண்டு தாற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவ மழைக்கு முன் இந்த ஏரியைத் தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி, புதிய மதகுகள்

பொன்னை சின்ன ஏரி மதகு விரிசல், மணல் மூட்டைகள் கொண்டு தாற்காலிகமாக அடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் வடகிழக்கு பருவ மழைக்கு முன் இந்த ஏரியைத் தூர்வாரி, கரைகளை பலப்படுத்தி, புதிய மதகுகள் கட்ட வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
காட்பாடி வட்டத்துக்குள்பட்ட பொன்னை ஊராட்சியில் சோளிங்கர் ஊராட்சி ஒன்றியத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சின்ன ஏரி கடந்த வாரம் செய்த கனமழை காரணமாக முழுவதுமாக நிரம்பியது. இந்நிலையில் சின்ன ஏரியின் மதகில் உடைப்பு ஏற்பட்டு, அதிக அளவில் நீர் வெளியேறி வீணாகிறது.
மேலும் விரிசல் அதிகரித்து ஏரிக்கரை உடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த 2015-ஆ ம் ஆண்டு பெய்த கன மழை காரணமாக பொன்னை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கின் போது, சின்ன ஏரி முழுவதுமாக நிரம்பியது. அப்போது பல ஆண்டுகளாக பராமரிப்பின்றி இருந்த மதகில் விரிசல் ஏற்பட்டு, ஏரியில் தேக்கிய நீர் முழுவதுமாக வெளியேறி வீணாகியது. அதனைத் தொடர்ந்து உடைப்பை சரி செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். ஆனால் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை.
இதன் காரணமாக கடந்த ஆண்டு பெய்த மழையின்போது, ஏரி முழுவதுமாக நிரம்பியும், மதகில் விரிசல் காரணமாக அதிகளவு நீர் வெளியேறி, கரை உடையும் நிலை ஏற்பட்டது. இதனால் அப்பகுதி விவசாயிகள் ஒன்று திரண்டு மண் கொண்டு உடைப்பை தாற்காலிகமாக சரிசெய்தனர். இதுகுறித்து தினமணி நாளிதழில் செய்தி வெளியானது.
அதனைத் தொடர்ந்து பருவ மழைக்கு முன் துரிதமாக உடைப்பை சரி செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்துக்கு பொன்னை பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனால் கடந்த வாரம் பெய்த கன மழை காரணமாக சின்ன எரி நிரம்பியது. ஆனால் சின்ன ஏரி மதகில் உடைப்பு ஏற்பட்டு, அதிக அளவில் நீர் வெளியேறியது. மேலும் ஏரிக்கரை உடையும் அபாயம் ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த பொன்னை கிராம நிர்வாக அலுவலர் சின்னையன், சோளிங்கர் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு தகவல் அளித்தார். அவரது உத்தரவின் பேரில், கிராம ஊராட்சி எழுத்தர் மற்றும் கிராம மக்கள் கடந்த இரு தினங்களாக 150-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகளை மதகு விரிசல் பகுதியில் அடுக்கி வைத்தனர். இப்பணி சனிக்கிழமை நிறைவடைந்தது. இதனால் தண்ணீர் வீணாவதை தாற்காலிகமாக தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இந்நிலையில் வரும் நவம்பர் மாதம் தொடங்க உள்ள வடகிழக்கு பருவ மழைக்கு முன் இந்த ஏரியை தூர்வாரி கரைகளை பலப்படுத்தி புதிய மதகுகள் அமைக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com