வேலூர் அருகே மணல் குவாரி அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, வாகனங்களை கிராம மக்கள் சனிக்கிழமை சிறைபிடித்தனர்.
வேலூரை அடுத்த மோட்டூரில் அரசு மணல் குவாரி அமைக்க அப்பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இரு தினங்களுக்கு முன்பு மணல் குவாரிக்குச் சென்று வருவதற்கான பாதை அமைக்கும் பணியைத் தடுத்து கிராம மக்கள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், குவாரிக்கு செல்வதற்கான பாதை அமைக்கும் பணி சனிக்கிழமை மீண்டும் தொடங்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பொதுமக்கள், பகல் ஒரு மணியளவில் பாதை அமைக்கும் பணிக்கு கொண்டு வரப்பட்ட இரண்டு பொக்லைன், லாரி உள்ளிட்டவாகனங்களை சிறைபிடித்தனர்.
தகவலறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற விரிஞ்சிபுரம் போலீஸார், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். எனினும் வாகனங்களை விட பொதுமக்கள் மறுத்து விட்டனர். இதையடுத்து, மாவட்ட வருவாய் அலுவலர் தா.செங்கோட்டையன் நேரில் சென்று பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்ததையடுத்து, 4 மணி நேரத்துக்குப் பிறகு சிறைபிடிக்கப்பட்ட வாகனங்களை பொதுமக்கள் விடுவித்தனர்.