புரட்டாசி மாதப் பிறப்பை முன்னிட்டு பெருமாள் கோயில்களில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
பெருமாளுக்கு உகந்த மாதமான புரட்டாசியில் இந்துக்கள் அசைவ உணவுகளை துறந்து, பெருமாள் கோயில்களில் நடைபெறும் சிறப்புப் பூஜையில் பங்கேற்பது வழக்கம்.
அதன்படி புரட்டாசி மாத முதல் நாளான ஞாயிற்றுக்கிழமை வேலூர் அண்ணா சாலையில் உள்ள திருமலை திருப்பதி தேவஸ்தான தகவல் மையத்தில் வெங்கடேசப் பெருமாள் வெள்ளிக்கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இங்கு நடைபெற்ற சிறப்புப் பூஜையில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர்.
கோட்டை கோயிலில்...
இதேபோன்று, கோட்டை ஜலகண்டேஸ்வரர் திருக்கோயிலில் உள்ள வெங்கடேசப் பெருமாளுக்கு சிறப்புப் பூஜைகள் நடத்தப்பட்டன.
வேலூரில் உள்ள அனைத்து பெருமாள் கோயில்களில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் திரளானோர் சுவாமி தரிசனம் செய்தனர்.
பள்ளிகொண்டா உத்திர ரங்கநாதர் திருக்கோயில், திருப்பாற்கடல் பிரசன்ன வெங்கடேசப்
பெருமாள், 108 திவ்ய தேசங்களில் ஒன்றான சோளிங்கர் லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் உள்ளிட்ட அனைத்து பெருமாள் கோயில்களிலும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.