ஆம்பூர் அருகே சோலூரில் இயங்கி வரும் தனியார் காலணி தொழிற்சாலை ஊழியர்கள் ஊதியம் கேட்டு திங்கள்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில்
ஈடுபட்டனர்.
சோலூர் கிராமத்தில் இயங்கி வரும் தனியார் காலணி தொழிற்சாலையில் 700-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இத்தொழிற்சாலை நிர்வாகம் கடந்த 6 மாதங்களாக தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்கவில்லையாம். அதே நேரத்தில் தொழிற்சாலையை மூடுவதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. அதனால் அங்கு பணிபுரியும் தொழிலாள்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சில தினங்களுக்கு முன்பு இவர்கள் வாணியம்பாடியில் உள்ள தொழிலாளர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தினர். அப்போது தொழிலாளர்களுக்கு சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதிமொழி அளிக்கப்பட்டது. ஆனால் இதுவரை சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனத் தெரிகிறது.
இதனால் ஆத்திரம் அடைந்த தொழிலாளர்கள், தொழிற்சாலை நிர்வாகத்தைக் கண்டித்தும், தொழிலாளர்களுக்கு எதிராக செயல்படும் தொழிற்சாலையின் உரிமையாளர்களை கைது செய்யக்கோரியும், ஆம்பூர் புறவழிச் சாலையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.