சைக்கிள் மீது லாரி மோதல்: மாணவர் சாவு
திருப்பத்தூரில் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பள்ளி மாணவர் இறந்தார்.
திருப்பத்தூரை அடுத்த புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் ஜெகன். தொழிலாளியான இவரது மகன் சஞ்சீவ் (16) . திருப்பத்தூரில் அரசு நிதி உதவி பெறும் பள்ளியில் பிளஸ் 1 படித்து வந்தார். இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை சஞ்சீவ் தனது சைக்கிளில் புதுக்கோட்டையில் இருந்து திருப்பத்தூருக்கு சென்று கொண்டிருந்தார்.
திருப்பத்தூர்-வாணியம்பாடி பிரதான சாலை தனியார் கல்லூரி எதிரே வந்தபோது, அங்கு பாதாள சாக்கடை திட்டப் பணிக்காக நிறுத்தப்பட்டிருந்த லாரியை அதன் ஓட்டுநர் பின்னோக்கி இயக்கியுள்ளார். அப்போது, எதிர்பாராதவிதமாக சஞ்சீவ் மீது லாரி மோதியது. இதில், அவர் பலத்த காயமடைந்தார். இதையடுத்து 108 ஆம்புலன்ஸுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆனால் சுமார் அரை மணிநேரமாகியும் ஆம்புலன்ஸ் வராததால் சஞ்சீவ் நிகழ்விடத்திலேயே இறந்தார்.
தகவலறிந்த திருப்பத்தூர் நகர போலீஸார் அங்கு சென்று சடலத்தை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக திருப்பத்தூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், வழக்குப் பதிவு செய்து, தப்பியோடிய லாரி ஓட்டுநரைத் தேடி வருகின்றனர்.