குடியாத்தம் அருகே கிராமத்துக்குள் நுழைந்த யானைக் கூட்டம் மா மரங்களை நாசம் செய்து விட்டுச் சென்றன.
ஆந்திர மாநில வனப் பகுதியில் இருந்து தண்ணீர்தேடி கடந்த சில மாதங்களாக யானைகள் கூட்டம், கூட்டமாக தமிழக எல்லையில் உள்ள கிராமங்களில் வந்து பயிர்களை நாசம் செய்து விட்டுச் செல்கின்றன.
திங்கள்கிழமை அதிகாலை 15 யானைகள் கூட்டமாக தமிழக எல்லையில் உள்ள சைனகுண்டா வழியாக கொட்டமிட்டா கிராமத்துக்கு வந்துள்ளன. அவை அங்குள்ள நிலங்களில் பயிரிடப்பட்டிருந்த மா மரங்களை முறித்தும், உடைத்தும் நாசம் செய்துள்ளன. அரை டன்னுக்கு மேல் மாங்காய்களையும் பறித்துத் தின்றுள்ளன.
தகவலின்பேரில், குடியாத்தம் வனச் சரக அலுவலர் சங்கரய்யா, வனவர்கள் அரி, தரணி ஆகியோர் தலைமையில் வனத் துறையினர் சென்று, கிராம மக்களின் உதவியுடன் பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் யானைகளை வனப் பகுதிக்கு விரட்டினர்.